ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதி, பிரதமர் மற்றும் டுபாய் ஆட்சியாளரான ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூமுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று(12) நடைபெற்றது.
இந்த சந்திப்பில் டுபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம், டுபாயின் முதல் பிரதி ஆட்சியாளரும், ஐக்கிய அரபு இராச்சிய பிரதி பிரதமரும் நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உலக அளவில் அரசாங்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்திச் சவால்களுக்கு நவீன தீர்வுகளை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
சர்வதேச கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், உலகளவில் ஆளுகை மற்றும் முக்கிய மூலோபாயத் துறைகளில் தலைவர்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை ஷேக் முஹம்மது பாராட்டினார்.
கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு கூட்டு முயற்சிகளால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவையும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையில் முக்கியமான துறைகளின் வளர்ச்சிக்கு வழங்கிய ஆதரவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இருதரப்பு உறவுகளின் விளைவாக முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அர்த்தமுள்ள சர்வதேச கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதிலும், உலகளாவிய நிர்வாக நடைமுறைகளை முன்னேடுத்துச் செல்வதிலும், சவால்களை எதிர்கொள்வதற்கும் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும் தேவையான நுண்ணறிவு கொண்டவர்களாக அரச தலைவர்களை மாற்றுவதற்கும் உலக அரச உச்சி மாநாடு ஆற்றிய மகத்தான பங்கையும் ஜனாதிபதி பாராட்டினார்.