ஜனாதிபதி நிதியத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் சேவைகளை நாட்டிலுள்ள 341 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்துதல், பிரதேச செயலக அலுவலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துதல் மற்றும் பிரதேச செயலக அலுவலகங்களில் பணிபுரியும் அந்தந்த துறைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி நிதியம் தற்போது செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும், விண்ணப்பங்களை எளிதாக்குவதற்கும், இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு புதிய கணினி அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அந்த அமைப்பின் மூலம் பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி நிதியத்தின் முந்தைய முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் விசாரிக்கப்பட்டு நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் ஒருபோதும் நிகழ அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.