follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை

சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை

Published on

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும் கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க செயற்பட்டதாகவும், நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்தால், இந்த வேலைத்திட்டத்தை தொடர தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்த போது அவரை காப்பாற்றியவர் தாம் என நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இவ்வாறு பாதுகாத்த ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாச அழித்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை அவரால் ஒருபோதும் முன்னேற்ற முடியாது எனவும், நாட்டை நேசிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ற வகையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற தனக்கு ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பண்டாரவளையில் இன்று (31) முற்பகல் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டைக் காப்பாற்ற கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்ததன் காரணமாகவே தாம் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக மேலும் தெரிவித்தார்.

தனது தேர்தல் விஞ்ஞாபனம் செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தக்கூடிய ஒரு நடைமுறை வேலைத்திட்டம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் குறைத்தல், தொழில் வாய்ப்பு வழங்குதல், வரிச்சுமையைக் குறைத்து தாங்கிக்கொள்ளக் கூடிய வரி முறையை உருவாக்குதல், பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குதல், உறுமய மற்றும் அஸ்வெசும ஆகியவற்றை பாதுகாத்து தகுதியான அனைவருக்கும் அவற்றை வழங்குதல் ஆகிய 05 முக்கிய நோக்கத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அஸ்வெசும வேலைத்திட்டம் சமுர்த்தியை அழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அல்ல என்றும், சமுர்த்தி வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக்க ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பிரச்சினையின்றி தமது பணிகளை தொடர முடியும் என்றும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“.. பல கட்சியினர் எனக்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதாலேயே நான் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறேன். அன்று கஷ்டமான நாட்டை நான் ஏற்றுக்கொண்டேன். இன்றைய நிலை எவ்வாறு உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக பால்மா, கேஸ், டீசல், பருப்பு உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அஸ்வெசும பெற்றுத் தந்தேன். மேலும் பல சலுகைகளை வழங்குவோம். எனக்கு பிரதானமாக ஐந்து நோக்கங்கள் உள்ளன. வாழ்க்கை சுமையை குறைப்பேன். தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க உள்ளேன். வரிச்சுமையை குறைப்பேன். பொருளாதாரத்தை பலப்படுத்தி ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவேன். உறுமய – அஸ்வெசும திட்டங்களின் கீழான நிவாரணங்கள் தகுதி பெற்ற சகலருக்கும் வழங்கப்படும்.

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை தேர்தல் முடிந்ததும் மறு தினமான செப். 22 இலிருந்து தொடர்ச்சியாக முன்னெடுக்க கூடிய வேலைத்திட்டங்களையே குறிப்பிட்டுள்ளேன். இப்போது வரையில் நாம் பல விடயங்களை செய்திருந்தாலும் அவை மக்கள் சுமையை குறைக்க போதுமானவை அல்ல என்பதை நாம் அறிவோம்.

ரூபாவை பலப்படுத்தி வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. அதனால் பொருட்களின் விலையும் குறையும். வரியை சேகரித்தே நாம் அதனை செய்ய வேண்டியுள்ளது. அஸ்வெசும திட்டத்துடன் சமுர்த்தியும் இணைக்கப்பட்டிருப்பதால் சமூர்த்தி ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் வழி செய்திருக்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்தால் மட்டுமே ரூபாயின் பெறுமதியும் வலுவடையும். நான் நாட்டை ஏற்றுகொண்டதன் பின்னர் 2023 நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்தேன். அதனால் அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க முடிந்தது.

அனுரவும் சஜித்தும் வரியை குறைப்போம் என்கிறார்கள். வரியை குறைத்தால் நிவாரணங்களை வழங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் நாம் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து வரிச் சுமையை குறைப்பதாக சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன எக்ஸிம் வங்கி உள்ளிட்ட பல தரப்புக்களுடன் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வரி தொடர்பிலான நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளோம்.எனவே திடீரென வரியை குறைப்பதால் அந்த தரப்பினருடனான ஒப்பந்தம் மீறப்படும். நாட்டுக்கு நிதி நிவாரணம் கிடைக்காது. அதனால் 2022 இல் இருந்ததை விடவும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

கைத்தட்டல் வாங்குவதற்காக 10 ரூபாய்க்கு அத்தியாவசிய பொருட்களை தருவேன் என்று நான் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன்.கேஸ் சிலிண்டர் 8000 ரூபாவிற்கு வாங்கும் நிலைக்கு நாம் செல்ல வேண்டுமா ?பொருளாதாரத்தை பலப்படுத்தி நிவாரணங்களை பெற்றுக்கொள்வதா என்ற பிரச்சினையே நாட்டில் உள்ளது.

பெருந்தோட்டங்களை கிராமமாக மாற்றும் திட்டத்தை செயற்படுத்துவோம். தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக சம்பள அதிகரிப்பு வழங்கியுள்ளோம். இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவோம். அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். முதலில் பயிற்சி பெற்ற பின்னர் நிரந்த நியமனம் வழங்கப்படும்.

அதற்கு மேலதிமாக 50 ஆயிரம் பேருக்கு சுய தொழில் பயிற்சி பெற்றுக்கொள்ள நிதி நிவாரணமும் வழங்குவோம். ஜேவிபி தொழில் வங்கியை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்களை அறிவிப்போம் என்று சொல்கிறது. அதற்காக முதலில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் மறந்து போயுள்ளனர். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 41 சொற்கள் கூட இளையோரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இவ்வாறானவர்களிடம் நாட்டை கையளிக்க வேண்டுமா?

நாம் சுற்றுலாவை பலப்படுத்துவோம். உள்ளூர் மக்களை விடவும் அதிகமாக சுற்றுலா பயணிகள் இங்கு நடமாடும் அளவிற்கு சுற்றுலா துறையை ஊக்குவித்து பண்டாரவளை பகுதியை மேம்படுத்துவோம். இங்குள்ள சந்தைக்கு பாரிய குளிரூட்டல் தொகுதியொன்றை பெற்றுத்தருவோம். அடுத்த வருடம் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

நான் டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, பிரேமதாச போன்ற ஜனாதிபதிகள் வழியை பின்பற்றி நடக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் ஆர்.எம்.அப்புஹாமியுடன் கட்சி சார்பில் பல கூட்டங்களை இந்தப் பிரதேசத்தில் நடத்தியிருக்கிறேன். கட்சிக்காக பாடுபட்டிருக்கிறேன். அன்று பிரேமதாச ஜனாதிபதி பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுகொண்டு தொழில் வலயங்களை அமைக்க முன்வந்த போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. அப்போது அவரை நான் தான் பாதுகாத்தேன்.

ஆனால் சஜித் பிரேமதாச இன்று ஐக்கிய தேசிய கட்சியை உடைத்துவிட்டார். அதனால் உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்கள் என்னோடு வந்து இணையுங்கள். உலகிலுள்ள பத்து கோடீஸ்வரர்களின் உதவியுடன் கஷ்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதாக சஜித் பிரேமதாச கூறுகிறார். அது வேடிக்கையான விடயமாகும். கனடாவில் இருக்கும் ஒருவர் இங்கு வந்து பாடசாலை அபிவிருத்திக்கு உதவி செய்வாறா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அதேபோல் சஜித்துக்கு பொருளாதாரம் பற்றி பேசத் தெரியவில்லை. அதற்காக ஹர்ஷ டி சில்வா, நாலக கொடஹேவா போன்றவர்களை நம்பியிருக்கிறார். அதனால் அவரின் சொந்த கட்சியை நிர்வகிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே ஐக்கிய தேசிய கட்சியினர் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். மேலும் நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிலிண்டர் கூட கிடைக்காத நிலை உருவாகும்..” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...