follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1IMF ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால் கிடைக்கவுள்ள பணத்தை இழக்க நேரிடும்

IMF ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால் கிடைக்கவுள்ள பணத்தை இழக்க நேரிடும்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (21) நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.

நாம் ஒரு நெருக்கடியை மாத்திரம் சந்திக்கவில்லை. நாம் இரண்டு நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக, கொவிட்-19 நோய்த்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் நாம் பாதிக்கப்பட்டோம். இந்த நிகழ்வுகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகள் போன்ற கொவிட் தொற்றுக்கு முன்னர் நாங்கள் எடுத்த நிதி நடவடிக்கைகள் வருமானம் குறையக் காரணமாகியது. அந்த சூழ்நிலையில், எமது சவால்கள் மிகவும் சிக்கலானதாக மாறியது.

நாடு இவ்வாறானதொரு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது நாம் எச்சரித்தோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த எச்சரிக்கையை ஒரு சிலர் மாத்திரமே கண்டுகொண்டார்கள். அன்று முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக இந்த நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு சுட்டிக்காட்டினோம்.

எதிர்காலத்தில் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்க 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என தெரிவித்தோம். எனினும், அன்று நாம் விடுத்த இந்த எச்சரிக்கை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. ஏனைய குழுக்கள் யதார்த்தமற்ற வாக்குறுதிகளை அளித்தன. உலகளாவிய கொவிட் நோய்த் தொற்று நமது நிலைமையை மேலும் மோசமாக்கியது. 2020 மற்றும் 2021 இல் உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. நாம் இன்னும் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.

இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடும் போது, உலக நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவில், கொவிட் காரணமாக, நிர்மாணத் துறை வீழ்ச்சி கண்டதுடன், அது நுகர்வோர் செலவினத்தையும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கூட, நுகர்வோர் செலவினம் ஏற்ற இறக்கமாக உள்ளது. அந்த பொருளாதாரங்கள் ஸ்திரமடைய வேண்டும்.

நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த உலகளாவிய பின்னணியும் காரணமாக அமைந்தது. நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்குத் தேவையான இந்த மாற்றங்களை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் அப்போதே, சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பு கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியிருந்தேன்.

பேராசிரியர் சிறிமல் அபேரத்ன விளக்கியது போன்று, நாம் தற்போது பொருளாதாரத்தையும் எமது கடனையும் ஸ்திரப்படுத்தியுள்ளதுடன், எம்மால் கடனை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாம் பணத்தை அச்சிட மாட்டோம் என்றும், வங்கிகளில் கடன் பெறப்போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளோம்.

நமது வருமானத்திலேயே நாம் தங்கி இருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அதனால், நான் உட்பட பலர் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது அடுத்த சவாலாகும். 2022 முதல் இயல்பு நிலைக்கு திரும்ப ஐந்தாண்டு திட்டம் எம்மிடம் உள்ளது.

2026 ஆம் ஆண்டாகும்போது அதனை நாம் அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறேன். 2027 ஆம் ஆண்டாகும்போது 5% வருடாந்த வளர்ச்சியைப் பேணுவதே எமது இலக்காகும். இந்த இலக்குகளை அடைவது பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அடிப்படையை வழங்கும் மத்திய வங்கிச் சட்டம் மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற ஏனைய சட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்தில், நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் முடங்கியதால், இத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை வழங்குதல் போன்ற இத்துறைகளில் பணிபுரிபவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய முதலீடுகளை பெறும்போது, நிர்மாணத் துறைக்கு பல வாய்ப்புகள் உருவாகும். காலி, கண்டி, கொழும்பு மற்றும் திருகோணமலையில் பாரிய ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களையும் பிங்கிரிய, யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் புதிய முதலீட்டு வலயங்களையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYEE Tax) போன்ற நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த முயற்சிகள், விரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் நிர்மாண அபிவிருத்தித் துறையின் எதிர்காலத்துடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...