செப்டம்பர் 22ஆம் திகதி 9வது ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய இப்போதே நமது வெற்றிப்படியினை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம்;
” கட்டுப்பணம் நல்ல தருணத்தில் வைப்பிலிடப்பட்டு வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு படி நாம் முன்னேறியுள்ளோம். செப்டம்பர் 22ஆம் திகதி 9வது ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். நாளை வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் உடனடியாக தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் தொடங்கும்” என்றார்.
நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 7ஆம் திகதி அறிவித்தது.
நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை அறிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக இருந்தது.
கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆகஸ்ட் 06ஆம் திகதி செய்திகள் வெளியாகின.