தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் தொற்றுநோய் மாத்திரமல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுமே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரத்கம தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ;
“.. கொவிட் காரணமாக மட்டுமல்ல, அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. நல்லாட்சி அரசாங்கம் மின் உற்பத்தியை நிறுத்தியது. சம்பூர் ஆலை, உமா ஓயா ஆலை நிறுத்தப்பட்டது. ஒரு அரசியல் பிரிவினர் மற்றொரு அரசியல் பிரிவினரை குற்றஞ்சாட்டினர். இறுதியில் நாட்டு மக்கள் மின்சாரத்தை இழக்கத் தொடங்கினர். அந்த சுமை கோட்டாபயவின் தோள்களில் விழுந்தது.
பெட்ரோல் வரிசைகள் இருந்தன. மின்சாரம் தயாரிக்க அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதனால் செலவு அதிகரித்தது. கடைசியில் பெட்ரோலுக்காக நீண்ட வரிசைகள் உருவானது.
ஒரு அரசாங்கம் அமைந்தவுடன், அரசாங்கத்தை விமர்சிப்பதில் பயனில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாம் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான விடைகளைக் கண்டறியவே நாங்கள் அரசாங்கத்தை அமைக்கிறோம். எனவே அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம்.
மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க முதலீட்டாளர்களை அழைத்து வந்தோம். ஆனால் எங்களுக்கு நேரம் இல்லை. அதெல்லாம் போராட்டத்தோடு நின்று போனது.
இந்த நாட்டில் பெற்றோர்களும் பிள்ளைகளும் நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச வேலை சந்தையில் வேலை செய்வதற்கு கல்வி கற்பிக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது
அதற்காகவே மஹிந்தோதய ஆய்வகங்களை ஆரம்பித்தோம். இன்று அது பயன்படுத்தபடுவதில்லை..”