பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“பொலிஸ்மா அதிபரை நியமிக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை, அதற்கு தேவையான பணிகளை செய்ய அதிகாரம் உள்ள ஜனாதிபதியிடம் கேட்பதுதான் நாங்கள் செய்ய முடியும்.
அதன்படி, ஜனாதிபதி செயலாளரிடம் அந்த கோரிக்கையை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தீர்மானித்தது. பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் நேற்று காலை கோரிக்கை விடுத்தோம். அதன்படி நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து எமக்கு பதில் கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்பிற்கு தேவையான சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளரினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..”