தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், தமது பதவிக்காலத்தின்போது 200 வாகனங்களை பயன்படுத்தியதாக மஹிந்தாநந்த அளுத்கமகே அண்மையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.
எனினும் இதனை மறுத்த தயாசிறி ஜெயசேகர, மஹிந்தாநந்த அளுத்கமகேயின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டார். அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே, தற்போது மயிலைப்போன்று முன்னால் ஆடும்போது அவரின் பின்னால் உள்ள விடயங்கள் தெளிவாக தெரிவதாக தயாசிறி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி இன்று மூன்று வாகனங்களை பயன்படுத்துவது சிறந்த விடயம். எனினும் அவர், கொழும்பில் பயணிக்கும் போது மூன்று வாகனங்களை பயன்படுத்துகிறார்.
தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் போது வாகனத் தொடரணியைப் பயன்படுத்துகிறார் என்று தயாசிறி குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தமது கருத்தை வெளியிட்ட அவை தலைவர் தினேஸ் குணவர்த்தன, ஆளும் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று குறிப்பிட்டார்
இதேவேளை தம்மீது சுமத்தப்பட்டகுற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே, மைத்திரிபால சிறிசேன காலத்தை விட தற்போதைய ஜனாதிபதியின் பாதீட்டில் ஒரு பில்லியன் ரூபா மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே தமது ஜனாதிபதியை பற்றி பேச தமக்கு உரிமையுள்ளதாக அவர் தெரிவித்தார் அத்துடன் முன்னாள் அமைச்சா்கள் சரத் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல மற்றும் முன்னாள் ஜனாதிபதி டி பி விஜயதுங்க ஆகியோர் பயன்படுத்திய மூன்று வீடுகளை இணைத்து பொிய வீடு ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன தற்போது வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிய தமக்கு விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டார்.
தம்மை பொறுத்தவரை, தமக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகளின் பாதீடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 பிரதிநிதிகள் காரணமாகவே இன்று அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எனவே அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் இருந்தால் அரசாங்கத்துக்கு என்ன நடக்கும் என்று மைத்திரிபால எச்சரிக்கை விடுத்தார்.