ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
உர தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை, சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்குசெய்தவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கப்பார்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.