ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் சுமார் 23 லட்சம் பலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாமில் தங்கியுள்ளனர்.
வடக்கு காஸா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் தங்க இடமின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்திய போதிலும், போர் நிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதேவேளையில் காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும். இன்னும் மாதம் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுமார் ஒரு வாரம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்கு 3 பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.