தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். தற்போது ஸ்திரமாக உள்ள நாட்டின் பொருளாதாரத்தை முழு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதே இந்த ஆண்டு பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாகும். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பாரிய அர்ப்பணிப்பை வழங்கினார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர்ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்,
மேலும், 2024ஆம் ஆண்டை பொருளாதார வளர்ச்சி ஆண்டாக மாற்றுவது இந்த ஆண்டு பட்ஜெட்டின் மற்றொரு இலக்காகும். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புகளை செய்தனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டை திரும்பிப் பார்த்தால், அந்த கசப்பான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்கள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படுவதை யாரும் பார்க்க விரும்பவில்லை. எனவே, நெருக்கடி நிலை மற்றும் நெருக்கடிக்கு காரணமான காரணங்கள் குறித்து சரியான புரிதலுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகுந்த உறுதியுடன் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். அவரின் தலைமைத்துவத்துக்கு இந்த நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர். அவர் எவ்வளவுதான் உறுதியுடன் இருந்தாலும், அந்த உறுதியின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், 15 மாதங்களுக்கு முன்பு இருந்த நாட்டிற்கும் இன்று நாம் அனுபவிக்கும் நாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியாது.
எனவே, ஜனாதிபதி முதல் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஜனாதிபதி அலுவலகம், பல்வேறு முக்கிய அமைச்சுகள் மற்றும் இந்நாட்டு மக்களும் கைகோர்த்து பெற்றுக் கொண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை இன்று அனுபவித்து வருகின்றனர்.இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. இன்று இருக்கும் நிலைக்கு வருவதற்கு மிகவும் வேதனையான காலகட்டத்தை நாம் கடந்தோம்.
இந்த வகையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த முதல் நாடு இலங்கை மட்டுமல்ல. ஆனால் குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சரியான பாதையில் பயணித்த நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இந்தப் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது என்பது அரசியல் கோணத்தில் பார்க்கவேண்டிய ஒரு விடயமல்ல. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பிரபலமான தீர்மானங்களை எடுக்கவில்லை. அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமடையக் கூடிய தீர்மானங்களை எடுத்திருந்தால், இந்த நாட்டின் நிலைமை 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
இந்த வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பு எமக்குத் தேவை. முதலில், பிரதேச அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களான உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எமக்கு வழங்குங்கள். ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைபேறான முன்மொழிவை வழங்க முடிந்தால், திருத்தங்களைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வரவு செலவுத்திட்டத்தில் உள்ள நல்ல விடயங்கள், மேலும் முன்னேற்றம் தேவைப்படும் விடயங்களை குறித்து கவனம் செலுத்துங்கள். ஒவ்வொருவரினதும் கருத்துகளுக்கு ஏற்ப தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக தரவு மற்றும் எண்களின் அடிப்படையில் உரிய பாராட்டுகளைப் பெறக்கூடிய முடிவுகளை எடுக்கும் கொள்கையை ஜனாதிபதியும் அரசாங்கமும் தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கிணங்க உலகின் சிறந்த நடைமுறைகளுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களின் ஆதரவு தேவை எனவும் அவர் தெரிவித்தார்.