மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார்.
1943இல் இந்தியாவில் பிறந்த அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில பயின்றுள்ளார். இலங்கை கல்வி நிறுவனங்கள் மத்தியில் ஹிந்தியை அறிமுகம் செய்து மேம்படுத்திய பேராசிரியர் தசநாயக்க, 1975 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது உலக ஹிந்தி மாநாட்டில் பங்குகொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.