இலங்கையில் சுமார் 11,000 நுண்கடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்ற போதிலும் 5 நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் கிராமப்புற குறைந்த வருமானம் பெறுபவர்களை கையாளும் இந்த நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக சுமார் 30 லட்சம் பேர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமானது என்றும், நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
“மைக்ரோ ஃபைனான்ஸ் நடக்க வேண்டும், ஆனால் நல்லாட்சி வர வேண்டும். நம் நாட்டில் 11,000 நிறுவனங்கள் உள்ளன, ஆனால் 5 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு இல்லை என்றால் ஒழுங்குமுறை இல்லை. அவர்கள் தன்னிச்சையாக வேலை செய்கிறார்கள். இதனால், கிராமப்புற பெண்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
இது சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. எனவே புதிய சட்டத்தை கொண்டு செயல்படுகிறோம். அனைத்து நுண்கடன் நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். அவை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சட்டத் தேவையை பூர்த்தி செய்யாதவர்களுக்கு 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.”