தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை இருந்த போதும், தீபாவளியன்று டெல்லி நகரம் முழுக்க பரவலாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். அது டெல்லி நகரத்தின் காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்கியது.
வாகன மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் உமிழ்வுகள், தூசு, கடுமையான வானிலை போன்ற பல காரணிகளால், உலகிலேயே மிகுந்த காற்று மாசுபாடான நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது
இந்திய அரசின் காற்றுத் தர கண்காணிப்பு அமைப்புகளின் கணக்குப் படி, வெள்ளிக்கிழமை, டெல்லியின் சில பகுதிகளில் ஆபத்தான காற்று மாசுபாடு 999ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன. இது தான் காற்று மாசுபாட்டை கணக்கிட வைக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தான் உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு பிரச்சினை உள்ளது. உலக அளவில் அதிகம் காற்று மாசுபாடு கொண்ட 30 நகரங்களில் 22 நகரம் இந்தியாவில்தான் உள்ளன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு மேல் நச்சுத்தன்மை கொண்ட காற்றால் உயிரிழக்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.