பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன் , உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் ஆகியோருடன் சுகாதார அமைச்சின் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கனடாவில் பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன் இதன் போது தெரிவித்தார். இவ்வாறான கட்டாயமாக்கல் ஊடாக கொவிட் தொற்றிலிருந்து ஒவ்வொரு நபர்களும் பாதுகாப்பு பெறுவதோடு , ஏனையோரும் பாதுகாக்கப்படுகின்றனர் என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றாளர்களை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பாகும். எனினும் குறித்த நபரிடமிருந்து பிரிதொருவருக்கு தொற்று பரவுவதை தடுப்பது அவரவர் பொறுப்பாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
இவ்வாறான பின்னணியில் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்லல் கட்டாயமாக்கப்படுகின்றமை நன்மையானதொரு விடயமாகும்.