சுவர்களில் ஓவியங்களை வரைந்து அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கூறிய இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனரா என்பதை கண்டறிந்து அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டுவரக்கூடிய அரசியலில் ஈடுபடுவதே பொதுஜன பெரமுனவிற்குள்ள வரலாற்று எதிர்கால பணியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இன்று (02) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் கட்சி பெரிதாக இருப்பினும், சிறிதாக இருப்பினும் ஒன்றாக ஒரே நோக்கத்திற்காக போராடியவர்களை யாராலும் பிரிக்க முடியாது. அவர்கள் எமது ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை. எனவே அன்று இருந்த அனைத்து கட்சிகளும் இணைந்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை பாதுகாப்பது பிரதான கட்சியான எமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பிக் கொண்டு எதிர்க்கட்சியில் இருந்த போதே திகன கலவரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன இடம்பெற்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் மக்களை தூண்டிவிடாமல் எவ்வாறு செயற்பட முடியும் என்பதையும் எமது கடந்த கால வரலாறு காட்டுகிறது.
நாம் எவ்வளவு ஒடுக்கப்பட்டாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்தோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், போராட்டம் நடத்தி, வேலைநிறுத்தப் பேரணிகளை நடத்தி மக்களை இருளில் மூழ்க வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் பொறுப்புள்ள கட்சியாக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டனர். மேலும், எந்த இடையூறுகள் வந்தாலும் மக்களை கைவிட்டு ஓடவில்லை. பயம், பதட்டத்துடன் முடிவுகளை எடுக்கவில்லை. அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் இப்பயணத்தை மேற்கொண்டோம். அந்த வரலாற்றை மனதில் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.
எமக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து நான் நன்கு பழக்கப்பட்டுள்ளேன். இதுபோன்ற காலங்களில் அரசாங்கம் செய்யாத தவறுகளுக்கும் அரசாங்கத்தையே மக்கள் குறைகூறுவர்.
மக்கள் குறை கூறலாம், உருவ பொம்மைகளை எரிக்கலாம். ஆனாலும் நாம் மக்கள் மத்திக்கு செல்ல வேண்டும். கெப்பதிகொல்லாவ பேருந்து குண்டு வெடிப்பின்போது நான் அங்கு சென்றது நினைவிருக்கும். மக்கள் குறை கூறினர். அழுதனர். என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எனக்கு அன்று அவர்களுக்கு ஆறுதல் கூற முடிந்தது. அம்மக்களின் முன்னிலையிலேயே நான் தேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை பொறுப்பேற்றேன்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் நான் அவ்வாறே செயற்பட்டேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு செல்வதற்கு முன்னதாக நான் அங்கு சென்றேன். மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு அரசியலே இன்று எமக்கு அவசியமாகவுள்ளது. பொதுஜன பெரமுன அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.