தற்போதுள்ள வருமான வழிகளை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் புதிய வருமான வழிகளை அறிமுகப்படுத்தி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தெரிவித்தார்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்காக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
அரச வருவாய் தொடர்பான சவாலில் பல அனுபவங்களை எதிர்கொண்டு தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்டளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். மேலும், மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் போது நமது அரச வருவாயை அதிகரிப்பதற்கு இன்னும் பல இலக்குகளை அடைய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய வரிகளை அறிமுகப்படுத்தல், வரி சதவீதத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் நாம் உச்ச வரம்பை எட்டியுள்ளோம். எனவே, வரி அடிப்படையை விரிவுபடுத்துவதிலும், வரி வலையில் உள்ள ஓட்டைகளைக் குறைப்பதிலும் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். மேலும், போட்டித்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையின் மூலம் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளான விடயங்களை நியாயமான மட்டத்திற்குக் கொண்டுவர இந்த கலந்துரையாடல்கள் உதவியது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.