ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இளைஞர் கூட்டணியின் புதிய தலைவர் பதவிக்கு தஹாம் சிறிசேன பரிந்துரைக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி, மாவட்ட ரீதியில் நிறுவப்படும் ஒரு அமைப்பின் பதவிக்கு தஹாம் சிறிசேன தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 1969ஆம் ஆண்டு பொலன்னறுவை இளைஞர் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதன்பின்னர், நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.