பெண்டோரா ஆவணம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் இரண்டாவது நாளாகவும் இன்று (15) கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
உலக பெரும்புள்ளிகளுக்கு உரித்தான, வெளிநாடுகளிலுள்ள மறைமுக சொத்துகள் குறித்த தகவல் பெண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான ஆவணம் ஊடாக கசிந்திருந்தது.
இந்த ஆவணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமரன் நடேசன் ஆகியோரது பெயர்களும் அடங்கியிருந்தது.
இந்நிலையில், குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய, கையூட்டல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
அதற்கமைய, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பெண்டோரா விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முதல் தடவையாக கடந்த 8 ஆம் திகதி அவ்வாணைக்குழுவின் முன்னிலையான திருக்குமரன் நடேசனிடம் 4 மணித்தியால வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.