தொடர்ச்சியான மக்கள் சேவையை வழங்கும் பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் நியமனமாகும் சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் தனித்துவமான சட்ட ஒழுங்குமுறைகள் உள்ளதாகவும், அவற்றை மீறும் எந்த உறுப்பினருக்கும் தண்டனை பிறப்பிக்கப்படும் எனவும், அவர்களுக்கு எதிராக தவறாது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தீர்வற்ற நாட்டுக்குத் தீர்வு எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் தெஹியத்தகண்டியில் இன்று(27) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமது உறுப்பினர்களுக்கு ஒப்பந்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் சொத்துக்களுடன் விளையாடுவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியால் விழுமியம் சார் உள்ளூராட்சி மன்றங்களை கட்டியெழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றில் எக்காலத்திலும் ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது தானோ வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யவில்லை எனவும், பிரசார கூட்டங்களை நடத்தவில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் எவராலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான சட்ட மூலமொன்று பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும், சர்வ கட்சிகள் அடங்கிய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.