எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பதவி வகிப்பது சட்டவிரோதமானது என கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு இன்று (25) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
இதன்படி, குறித்த மனு தொடர்பில் தமது ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் திகதிகளை வழங்கியது.
இந்த மனு கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கியது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அரசியலமைப்பின்படி, வேறு கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியாது என மனுதாரர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அவர்களது கட்சி அங்கத்துவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அடிப்படைகள் இல்லை என தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றில் கோரியிருந்தார்.