மின்சார கட்டணத்தை திருத்தும் அமைச்சரவையின் பிரேரணையை அமுல்படுத்த வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய மூவரும் அறிவித்துள்ளதாகவும், தாம் மூவரின் தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (20) தெரிவித்தார்.
நேற்று (19) ஆணைக்குழுவின் உப தலைவர் உதேனி விக்கிரமசிங்க, உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் சத்துரிக்கா விஜேசிங்க ஆகிய மூவரின் கையொப்பத்துடன் எழுத்து மூலம் இந்தத் தீர்மானம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் தலைவரான தாம் இன்றி ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில் இந்த மூன்று உறுப்பினர்களுடன் நேற்று(19) கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரவையின் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்ற ஆணைக்குழுவின் தீர்மானம் அந்த உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் நாடாளுமன்ற தேசிய சபை நேற்றைய தினம் வரவழைத்தபோது தாம் மிகவும் சங்கடமடைந்ததாகவும் அவைத் தலைவர் கூறினார்.
அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட மின்சாரத் திருத்தம் 2009 மின்சாரச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது என்பதாலும், சுயாதீன ஆணைக்குழுவிற்கான அரசியல் அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாலும், அதனை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என மூவர் வழங்கிய நோட்டீசுக்கு உடன்பாடில்லை எனவும் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் அழுத்தங்களுக்கு தாம் முற்றாக எதிரானவர் எனவும், குறித்த மூவருக்கும் எதிராக இரண்டு நாட்களுக்குள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சுயாதீன ஆணைக்குழுவினால் அவ்வாறு செயற்பட முடியாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து 12ஆம் திகதி விசேட கூட்டத்தை நடத்தி அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்த முடியாது என தீர்மானித்த 8 நாட்களில் அந்த தீர்மானத்திற்கு எதிரானவர்கள் என உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.