இந்நாட்டில் இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கே பிரபஞ்சம் திட்டம் மூலம் பேரூந்துகளை வழங்குகிறேனே தவிர யாருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த உன்னத வேலைத்திட்டம் தொடர்பில் தேவைப்பட்டால் ஒருவார கால பாராளுமன்ற விவாதத்திற்கு தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பல பாடசாலைகளில் போக்குவரத்துச் செலவு பாரியளவில் செலவாகுவதாகவும், அது இந்நாட்டில் உள்ள பெற்றோரின் பணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பரிகாரமாகவே பஸ் வசதிகளை ஏற்பாடு செய்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் தேர்தலின் போது தமது சின்னம் மற்றும் விருப்பிலக்கங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களுக்கு பஸ்களை பயன்படுத்துகிறார்கள் என்றாலும், குழந்தைகளின் நலனுக்காகவே தாம் பஸ்களை நன்கொடையாக வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.