இலங்கை கால்பந்து சம்மேளனம் சட்ட திருத்தங்களுக்கு அமைய நடவடிக்கைளை மேற்கொள்ளாது இருப்பின் இலங்கைக்கு, சர்வதேச ரீதியாக கால்பந்துக்கு தடையை விதிக்க நேரிடும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் மூலம் இதனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று முன்தினம் விளையாட்டு சட்டதிட்டங்களுக்கு மேலதிகமாக சட்டங்களை உள்ளீர்ப்பு செய்திருந்த நிலையில் அதற்கு தேசிய விளையாட்டு சங்கங்கள் பல எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.
அவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு இது தொடர்பில் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பிரதான உறுப்புரிமை சங்கத்தின் அதிகாரி கெனி ஜீன் மாரி இனால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், கால்பந்து தேர்தல் தொடர்பில் வெளித்தலையீடுகள் தொடர்பிலும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 செப்டம்பர் 22 அன்று நிறைவேற்றப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் சட்டதிருத்தங்கள் மற்றும் காலவெளிக்கு அமைவாக கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி வரையில் நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு நடக்காதவிடத்து இலங்கைக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடையினை விதிப்பது குறித்து ஆரம்ப கட்ட நிலையினை ஆராயும் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதால், குறித்த கடிதத்தினை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்க இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் முன்னாள் செயலாளர் உபாலி ஹேவகே ஆகியோர் விளையாட்டு அமைச்சுக்கு வருகை தந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.