அடுத்த வருடம் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முதலில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும். மின்சார சபையை எட்டு அலகுகளாக உடைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், கடந்த கால நட்டங்களை சமாளிக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படாது எனவும், மின் கட்டண அதிகரிப்பினால் தொழில்கள் பாரியளவில் பாதிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சபைத் தலைவரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, மின்சார சபையில் எந்தெந்த இடங்களில் நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடியவில்லை என குறிப்பிட்டார்.
இப்பிராந்தியத்தில் அதிக மின்சார அலகு செலவை இலங்கை கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். ஒரு அலகு மின்சாரத்தின் விலை உயரும் போது உற்பத்திச் செலவு அதிகரித்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றார்.
பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் எனவும், இது தொடர்பில் மின்சார அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.