பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் குளியாபிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தங்கொடுவ, வென்னப்புவ, மாகந்துர போன்ற பல பிரதேசங்களில் விஞ்ஞானம் கற்பிக்கும் 24 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரிடம் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விசாரணையின் போது சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பன்னல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் உதவி வகுப்பு தொடர்பான வாட்ஸ்அப் குழுவில் இருந்து சிறுமியின் எண்ணைக் கண்டுபிடித்து சில தூண்டுதல்களை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தங்கொடுவ பிரதேசத்தில் உள்ள வகுப்பில் கற்பித்துக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி சம்பிக்க லசிதகுமார, சந்தேகநபருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு காணப்படுவதாகவும் சந்தேகநபருக்கு தகுந்த பிணை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கேள்வியெழுப்பிய நீதவான், நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து பலாத்காரங்களும் காதல் உறவின் அடிப்படையிலேயே இடம்பெறுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
பொலிஸாரால் கோடிட்டுக் காட்டப்பட்ட உண்மைகளின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய ஆசிரியையின் வகுப்புகளில் கல்வி கற்கும் ஏனைய சிறுமிகளை விசாரணை செய்து உண்மைகளை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.