எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதிகளில் 3 நாட்கள் மாத்திரம் நடைபெறும் பாடசாலைகளில் மாணவர்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்தார்.
எனினும், 05 நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படும் பகுதிகளில் மாத்திரம் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு அமைவாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போதைய நெருக்கடி நிலையில் பெற்றோர்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதால், அவர்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா சுட்டிக்காட்டினார்.