அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4 பில்லியன் ரூபாய் (1,496,155,864) ஈட்டியிருந்தாலும், 100 மில்லியன் ரூபாய் மாத்திரமே அரச திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் கோப் குழு விசேட கவனம் செலுத்தியது. இதன்போது கோப் குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், அரச நிறுவனங்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை அரச திறைசேரிக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரச மரக் கூட்டுத்தாபனத்தின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயற்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக கோப் குழு கூடிய போதே குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
14.4 மில்லியன் ரூபாய் கடனாளிகளை திறைசேரியின் அனுமதியின்றி தள்ளுபடி செய்தமை தொடர்பில் கோப் குழு வினவியது. நிறுவன கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் அனுமதியைப் பெற்று 2007 இல் அப்போதைய பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது கோப் குழுவின் தலைவர் தெரிவிக்கையில், அரசாங்கக் கடன்கள் தொடர்பான ஒருங்கிணைந்த நிதிக்கு திறைசேரியின் செயலாளரே பொறுப்பாக இருப்பதால், அவ்வாறு கடனாளிகளை தள்ளுபடிசெய்வதாயின் அது தொடர்பில் பிரதான கணக்காளரினால் திறைசேரியின் செயலாளருக்கு அறிவித்து அனுமதி பெறவேண்டும் எனக் குறிப்பிட்டார்.