மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மதுவரித் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
மதுவரித் திணைக்களம் தொடர்பான 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாண தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடியபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
கணினிக் கட்டமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஜனவரிக்குள் இது நிறைவடையும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவித்தார்.
வருவாய் மற்றும் கணக்குப் பிரிவுகளில் மதுபான ஏற்றுமதிக்கான மதுவரி குறித்த தகவல்களை ஆவணப்படுத்தி பராமரிக்காதது உள்ளிட்ட நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், அவற்றை விரைவில் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டது