பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று(30) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
மிக உயர்ந்த முறையில் மாநாட்டை நடத்துவதற்கு பங்களித்ததற்காக தமது பாராட்டைத் தெரிவித்த அமைச்சர்கள், மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரையையும் பாராட்டினர். கொவிட் தொற்றுநோயின் காரணமாக தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
பூட்டான் வெளிவிவகார அமைச்சர் டெண்டி டோர்ஜி (Tandi Dorji), இலங்கையில் மருத்துவக் கல்வி மிகவும் உயர் தரத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இலங்கையில் மருத்துவக் கல்வி கற்க தமது நாட்டு மாணவர்கள் அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வெளிநாட்டு மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பில் சலுகை வழங்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கை, ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டது.
நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நாராயண் கட்கா (Narayan Khadka), இரு நாடுகளுக்கும் இடையிலான 65 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்தார். பொதுவான, கலாசார மற்றும் மத பாரம்பரியம் கொண்ட நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கலாசார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு. நாராயண், தனது நாடு திறக்கப்பட்டிருப்பதனால் பௌத்த மத சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டிற்கு வருகை தரலாம் என்றும் குறிப்பிட்டார்.
பங்களாதேஷின் பொருளாதார முன்னேற்றம் குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துல் மொமனிடம் (A. K. Abdul Momen)ஜனாதிபதி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
பங்களாதேஷில் 50,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.