வெனிசுலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலக வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் எனவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒப்பந்தம் தொடர்பாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பைக் கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதே திட்டத்தின் பிரதான நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் இருப்பு, வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
100 பில்லியன் டொலர் முதலீடு எதிர்பார்ப்பு
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், வெனிசுலாவின் பெட்ரோலியத் துறைக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
அத்துடன், இதன் மூலம் வெனிசுலா அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்பட்டால், இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத வெனிசுலாவின் மிகப்பெரிய பெட்ரோலிய வளங்களை மேம்படுத்தி பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த ஒப்பந்தத்தின் நடைமுறை வடிவம், முதலீட்டு ஏற்பாடுகள் மற்றும் எண்ணெய் வளங்களின் கட்டுப்பாடு தொடர்பான மேலதிக விவரங்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
