தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதையடுத்து, அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் கலாபெவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்குள் வரும் நீரின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நேற்று (11) மாலை முதல் வான்கதவுகள் படிப்படியாக அதிகரித்து திறக்கப்பட்டதாக பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, 04 வான்கதவுகள் தலா 06 அடி வரையிலும், 04 வான்கதவுகள் தலா 05 அடி வரையிலும், மேலும் 04 வான்கதவுகள் தலா 04 அடி வரையிலும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாடிக்கு சுமார் 14,287 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கலா ஓயா இருபுறங்களிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஓயாவைப் பயன்படுத்துபவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
