இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து வட அகலாங்கு 10.1N மற்றும் கிழக்கு நெட்டாங்கு 82.5E அருகே நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளிமண்டல அமைப்பின் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தரவுகளின் அடிப்படையில் அடுத்த 48 மணித்தியாலங்களில் இந்த அமைப்பு காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுப்பெறும் சாத்தியம் இல்லை எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், மீனவர்கள், கடல்சார் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
