“வளமான கித்துல் – நிலையான நாடு” என்ற தொனிப்பொருளை மையப்படுத்தி, கித்துல் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 13 மாவட்டங்களில், மனைக் கைத்தொழிலாக இந்தக் கித்துல் சார் உற்பத்திகள் தயாரிக்கப்படவுள்ளன.
கித்துல் அறுவடை முதல் அது சார் உற்பத்திகளின் விற்பனை வரையிலான தொழிற்றுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்த்து, சர்வதேசச் சந்தை வரையில் கித்துல் சார் உற்பத்திகளைக் கொண்டு செல்வதே நோக்காகக் கொண்டு, 2021 மார்ச் 17ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, கித்துல் அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது.
அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக, “கித்துல் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்ட வரைபு”, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரணவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் காலி – அக்மீமன ஹியாரே நீர்த்தேக்கத்துக்கு அருகில் வைத்து இன்று (17) கையளிக்கப்பட்டது.
கித்துல் பாணி உற்பத்திக்கான “இலங்கைத் தரம்” அறிமுகப்படுத்தப்படும் வகையிலான “தரச் சான்றிதழ்”, ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது, கித்துல் உற்பத்திகள் அடங்கிய பேழையொன்று, ஜனாதிபதிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. கித்துல் அறுவடை, பாணி உற்பத்தி, கித்துல் சார் உணவுப் பொருட்கள், கித்துல் சார் அலங்காரப் பொருட்கள் மற்றும் இந்தத் தொழிற்றுறைக்கான கருவிகளை, ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார்.