பொரளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுமார் 16 வருட காலமாக, குறித்த தேவாலயத்திற்கு வருகின்ற நபர் என்பதுடன், கடந்த 9 மாதங்களாக குறித்த தேவாலயத்திலேயே நிரந்தரமாக அவர் தங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கைக்குண்டு தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட சில பொருட்களையும் சந்தேகநபர் தங்கியிருந்த அறையிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.