சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் வித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதனால் விரைவில் அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,
“145% வரி கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இந்த அளவுக்கு வரி நீடிக்காது. நிச்சயம் குறைக்கப்படும். ஆனால் அது பூஜ்ஜியமாக மட்டும் இருக்காது. ஒரு காலத்தில் சீனாவுக்கு எந்த வரியும் இல்லாமல் இருந்தது. இதனால் நாம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டோம். இனி இதுபோன்ற நிலை இருக்காது.
இனி வரும் காலங்களில் நாமும் நன்றாக நடந்து கொள்வோம். அவர்களும் நன்றாக நடந்து கொள்வார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் நம்முடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், “இந்த அளவுக்கான வரி தொடர்வது சாத்தியமில்லை. தற்போது இருக்கும் வர்த்தக அமைப்பு நீடிக்காது” என்று கூறியுள்ளார்.
டிரம்ப்பும், நிதி செயலாளர் பேச்சுகளை வைத்து பார்க்கும்போது சீனாவுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதை போல தெரிகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் சீன பொருட்களுக்கு 145% வரியும், சீனாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 125% வரியும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இரு நாடுகளும் தங்கள் பொருட்களை எதிரெதிர் நாடுகளில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
இப்போது வரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக டிரம்ப் பேசியிருப்பது ஒட்டுமொத்த வர்த்தக போரையும் முடித்து வைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் டிரம்ப் பேச்சில் உண்மைதன்மை எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்னதான் அமெரிக்கா மீண்டும் சீனாவுடன் வர்த்தகத்தை தொடங்கினாலும், அது இயல்பு நிலையில் இருந்ததை போன்று இருக்காது. புதிய விதிகள் சர்வதேச வர்த்தகத்தில் உருவாக்கப்படும்.