சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) காலை வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு அருகாமையில் நடைபெற்றது.
தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திக்கற்றுச் சென்ற பொருளாதாரத்தையே தற்போதைய அரசாங்கம் மாற்றிக்கொண்டிருப்பதாகவும், நெல் களஞ்சியங்கள் அழிவடைய இடமளித்து, நெல் சந்தைப்படுத்தல் சபை சுமார் 2,800 கோடி ரூபா கடன் சுமையை கொண்டிருப்பதாகவும், அந்த சரிவுகளில் இருந்து மீட்டெடுத்து மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புச் செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதன்போது இந்நாட்டின் விவசாயத்துறைக்கு அமைவான அரச பொறிமுறையை போலவே ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நாட்டின் கலாச்சார ஒழுக்கக் கட்டமைப்பையும் இணைத்துக்கொண்டு, தேசிய போருளாதாரத்தினை பலப்படுத்த மீண்டும் விவசாய பொருளாதார பாரம்பரியத்தை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நமது முந்தைய மன்னர்கள் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளுக்கு ஆற்றிய சேவையின் மூலம் மகத்துவத்தை அடைந்துள்ளதாகவும், நாட்டை உணவில் தன்னிறைவு பெறச் செய்வது மிகவும் முக்கியம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நிலைபேறான அபிவிருத்தி இன்று உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகியுள்ளதாகவும், இலங்கையின் நீர்வள நாகரிகம் நிலைபேறான அபிவிருத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்நாட்டின் நீர்ப்பாசனக் கட்டமைப்பு ஏற்கனவே விவசாய வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
எனவே, நீர்ப்பாசன கட்டமைப்பை மீண்டும் புனர்நிர்மானம் செய்வதற்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 02 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வடமத்திய மகா எல திட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மரபணு உரிமைகளைப் பாதுகாத்து விதைகளில் தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்க விதைப் பண்ணைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயப் உற்பத்திகளுக்கு விவசாயியைப்போன்று நுகர்வோருக்கும் நியாயமான விலை தேவை என்றும் நீண்ட காலமாக சந்தை சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால், விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் நியாயமான விலையை வழங்க அடுத்த இரண்டு அல்லது மூன்று போகங்களில் அரசாங்கத்தின் தலையீடு மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசின் தலையீட்டிற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை சேமித்து வைப்பதற்கான கொள்ளளவு வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதன் மூலம் சந்தை சீர்குலைவைத் தவிர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.