எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக பல சபைகளுக்கு அரசியல் கட்சிகளாலும், சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை இந்த வாரத்திலேயே விசாரித்து தீர்ப்பு வழங்கும் சாத்தியம் இருப்பதாக, அவ்வாறான சில வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க உள்ளவர்களில் ஒருவரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய எழுந்துள்ள சில சட்டப் சிக்கல்கள் தொடர்பிலேயே பல கட்சிகளாலும், சுயேட்சை குழுக்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,ஐக்கிய தேசிய கூட்டமைப்பு(United National Alliance) , தமிழரசுக் கட்சி ,தமிழீழ விடுதலை அமைப்பு(TELO) போன்றவை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் கட்சியின் செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மனுதாரராகவும் ,அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அக் கட்சிகள் சேர்ந்து போட்டியிடவுள்ள சில சபைகளுக்கான நிராகரிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை பொறுத்தவரை பிரஸ்தாப கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லாஹ் மனுதாரராகவும் இருக்கின்ற நிலையில் அவற்றுக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வாதாட உள்ளார்.