201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அமைச்சரவை அனுமதி இன்றியும், பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்கள் இன்றியும் 3088 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில்(கோபா குழு) தெரியவந்தது.
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (21) கூடிய போதே இந்த விபரம் தெரியவந்தது.
இது பற்றி விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலில் வராமையினால் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.
முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அடிச்சட்ட இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை பதிவுக் கட்டமைப்பிலிருந்து மாற்றி மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு அவற்றை வழங்கி, சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ் வெளியிட்டமை குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியது. இதனால் அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
மேலும், பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத வெற்று இலக்கங்களை மோசடியாகப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு இராஜதந்திர வாகன இலக்கங்கள் வேறு வாகனங்களின் பதிவுகளுக்காகப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 122 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தினார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவற்றுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதில் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்க திணைக்களத்தை மாதம் தோறும் குழு முன்நிலையில் அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இங்கு இடம்பெற்றுள்ள மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.