இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் ராஜா குரூஸ், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் மொஹமட் ஆலம், வட மாகாண கடற்றொழில் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர், அமைச்சரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் அத்துமீறலால் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீன்பிடி சட்டம் வரைபு திருத்தம், உள்ளுர் மின்பிடியில் தடை செய்யப்பட்டுள்ள மின்பிடி நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் கூறியவை வருமாறு,
” இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆவண படமொன்றை தயாரித்துள்ளனர். அதனை எனக்கு காண்பித்தனர்.
அதேபோல இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர். எனவே, இவற்றை தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.
அதேபோல் கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அவை ஊடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும்.” – என்றார்.