கொழும்பு புதுக்கடை எண் 5 நீதிமன்றத்தில் உள்ள சிறையில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்கையில்;
“குற்றம் நடந்த கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் சில மணி நேரங்களுக்குள், குறித்த சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தடை செய்யப்பட்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.”
புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவம் நிகழும்போது, பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. விசாரணைகளைத் திசைதிருப்ப குற்றவாளிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது சாத்தியமாகும். “அவளைக் கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் இன்னும் தீவிரமாக உள்ளன.”