இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா நகரங்கள் குண்டு வீச்சுக்கு சின்னாபின்னமாகின.
அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களை விடுவித்து வருகின்றனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஹமாஸ் பிடியில் இன்னும் பிணைக்கைதிகள் உள்ளனர். அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.
ஜெருசலேமில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும் வரை சமாதானம் சாத்தியமற்றது. இதனால் ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும் போது, “காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்.”
“காசாவில் ஹமாஸ் இராணுவ திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் ஒழிக்க அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவோம். காசா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்.”
“இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் பலவீனமாக உள்ளது. கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.